சிவகங்கை செல்வந்தர் சிதம்பரத்துக்கு ஏழை பங்காளன் மோடியின் பட்ஜெட் எப்படி புரியும்?.. தமிழிசை விளாசல்
மத்திய அரசின் பட்ஜெட் பயனற்றது என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை: சிவகங்கையை சேர்ந்த செல்வந்தர் சிதம்பரத்துக்கு ஏழை பங்காளன் பிரதமர் மோடியின் பட்ஜெட் எப்படி புரியும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்று வேலை என்றும் சாமானிய மக்களுக்கு பயன்தராத பட்ஜெட் என்றும் தனியார் தொலைகாட்சி சேனல் நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
மேலும் இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதை தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்துக்கு செய்தது என்ன?
இதுகுறித்து தமிழிசை தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர்களுக்கு எங்கள் ஏழைபங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும், சிவகங்கை செட்டிநாட்டு செல்வந்தர் சிதம்பரத்துக்கு தமிழிசை பதில். 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் முக்கிய அமைச்சராக பணியாற்றிய சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?
ஏடிஎம் சென்டர்களை கொண்டு வந்தீர்கள்
அவரை பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பிய சிவகங்கைக்கும் அதை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கொண்டு வந்த ஒரு உருப்படியான பெரிய திட்டத்தை சொல்ல முடியுமா? அங்கே வங்கிகளையும், ATM சென்டர்களையும் கொண்டுவந்ததை தவிர சிதம்பரம் வேறு என்ன செய்தார்? அகில இந்திய அளவில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அவரது தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தை இன்று அடையாளம் கண்ட மத்திய அரசு அதையும் முன்னேற்ற திட்டம் தீட்டியுள்ளது.
பக்கோடா விற்பனை
வேலையின்றி இருப்போர்க்கு உதவ கிடைக்கும் வங்கிக்கடன் மூலம் ஒருவர் தெருவில் பக்கோடா விற்றால் கூட தினசரி ரூ 200 பெற முடியம் என்று சொன்னதை திரித்து கூறி பக்கோடா விற்பவர்களை பிச்சைக்காரர்களுக்கு சமமாக ஒப்பிட்ட செட்டிநாடு சீமான் கண்களுக்கு சுய வேலைவாய்ப்பு என்பது கேவலமாக தோன்றுவது ஏன்? இந்நாட்டு வேலையில்லா பட்டதாரிகளை உடனே தன்மகனைப்போல் கோடீஸ்வரர்களாக மாற்றும் சிதம்பர ரகசியம் என்ன என்பதை மக்களுடன் பகிர்வாரா சிதம்பரம்?
மருத்துவ காப்பீடு
உலகின் மிகப்பெரிய அளவிலான மக்கள் உடல்நலம் பேணும் காப்பீட்டு திட்டத்தை 50 கோடி மக்களுக்கு எப்படி செயல்படுத்துவார்கள் எனக் கேட்கிறார் சிதம்பரம், அதற்கான நிதி ஆதாரம் எங்கே எனக் கேட்கும் சிதம்பரத்திற்கு நிதி ஆயூக் தலைவர் பதில் ஏற்கனவே 2000 கோடி உள்ளது 2% செஸ்வரி மட்டும் போதுமே, நீங்கள் முடியாது என்று நினைத்ததை முடித்துக்காட்டுபவர் தான் என் தலைவன் மோடி.
பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை
ஜிஎஸ்டி முடியாது என்று விட்டுவிட்டீர்கள் அதனை செயல்படுத்தி காட்டியவர் மோடி பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை மன் மோகன் சிங் ஆட்சியில் யோசித்தோம் என்றார், அதனை நடத்திக் காட்டியவர்கள் மோடி. தூய்மை இந்தியா திட்டத்தை கேலி பேசிய நீங்கள் இன்று அத்திட்டத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் நடக்காத அதிசயம் 30 கோடி மக்களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இலவச கேஸ் திட்டம்
2014 ஆம் ஆண்டிலிருந்து 30 கோடி இந்தியர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி சாதனைப்படைத்த மோடி அரசு இன்று 60 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது, 5 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் வெற்றிகரமாக வழங்கி இன்று 8 கோடி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்திய மோடி அரசால் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க முடியாதா? நீங்கள் முடியாது என்று சொன்னதை முடித்து காட்டுபவர் தான் எங்கள் மோடி என்று தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.