அவங்கவுங்க விருப்பத்துக்கு கருத்து சொல்லாதீங்க... அமைச்சர்களுக்கு தமிழிசை அட்வைஸ்
தமிழகத்தில் அமைச்சர்கள் அவரவர் விருப்பப்படி கருத்துக்களை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் அமைச்சர்கள் அவரவர் விருப்பப்படி கருத்துக்களை கூறுவதை தவிர்த்து, மக்களை வாட்டும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளில் தீவிரம் காட்டும் படி பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியில் உட்கட்சிப் பூசலால் ஏற்படும் குழப்பங்களை தவிர்த்து மக்கள் பிரச்சனையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
டெங்குவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும், சமூக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், மழை நீர் சேமிப்பு, வறட்சி ஆகிய பிரச்சனைகளில் பொதுமக்களை காக்க, தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் பாரதிய ஜனதாவில் இணைந்து வருவது கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக தெரிவித்தார்.