ஆவிக்கு பயப்படுவது போல் காவிக்கு பயப்படுகிறார்கள்... தமிழிசை பொளேர்
ஆவியை பார்த்து பயப்படுவது போல் காவியை பார்த்து பயப்படுகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கரூர்: ஆவியை பார்த்து பயப்படுவது போல் காவியை பார்த்து பயப்படுகிறார்கள் என கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்குழுவில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கரூரில் பாஜகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் மத்தியஇணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் ரகுசுந்தரராமன், இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாஜக பொதுக்குழுவில் தமிழிசை பேசுகையில், பாஜக என்றால் பொறுமையாக இருப்பார்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் திருப்பி அடிக்கிற கூட்டம்தான்.
தமிழகத்தில் காவி ஆட்சி விரைவில் அமையும் காலம் வந்து விட்டது. ஆவியை பார்த்து பயப்படுவதுபோல இந்த காவியை பார்த்து பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
எதற்கு அஞ்சமாட்டேன். பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் என் உயிர் போகும் என்றார் தமிழிசை. இதைத் தொடர்ந்து கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இணையதளத்தில் என்னை மோசமாக விமர்சிக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறியதற்கு ஆதாரத்தை வெளியிட திருமாவளவன் கேட்டது குறித்து தமிழிசையிடம் கேட்டதற்கு, பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டுவிட்டது என்றார் தமிழிசை.