கலாம் வீட்டிலிருந்து கமலின் அரசியல் பயணத்தை ஏற்க முடியாது... விடாமல் மல்லுக்கட்டும் தமிழிசை
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாங்க தயாராக உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மதுரை: அப்துல்கலாம் அனைவருக்கும் பொதுவானவர். அவர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து அரசியல் கட்சியை தொடங்குவேன் என்று கமல் கூறியதை ஏற்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அனைவராலும் மதிக்கப்படுவர். பாஜகதான் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது.
ஆனால் அவரை ஏதோ ஒரு அரசியல் மையம் போல் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். கமல்ஹாசன் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க போவதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர் அரசியலில் இறங்கட்டும். அப்போது மக்கள் பிரச்சினைகளை எப்படி அணுகுகிறார்கள் என்று பார்ப்போம். பாஜக அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி துணிச்சலுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
ஆண்டாள் விவகாரத்தில் மனம் உவந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தமிழிசை.