காவிரி மேலாண்மை வாரியமோ குழுவோ எது அமைத்தாலும் ஏற்க வேண்டும்... தமிழிசை அட்வைஸ்!
காவிரி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வை குழுவோ மத்திய அரசு எது அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் : காவிரி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வை குழுவோ மத்திய அரசு எது அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இரண்டு நாட்களில் முடிவடையும் நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் காவிரி டெல்டா விவசாயிகள். ஆனால் மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியம் இல்லை குழு தான் அமைக்கப்படுகிறது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் இனி அதற்கான வாய்ப்புகள் எந்த அளவில் இருக்கும் என்பது கேள்விக்குறியான விஷயமே.
சுசகமாக சொன்ன தமிழிசை
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியமோ குழுவோ மத்திய அரசு எதை அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரசுக்கும் பங்கு
அரசியல் நாகரிகம் கருதியே ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து பேசி இருப்பார். கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு என்றும் தமிழிசை கூறினார்.
அதிகாரம் தான் முக்கியம்
முன்னதாக திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. அங்கு பேசிய தமிழிசை சவுந்திரராஜன், கர்நாடக தேர்தல் தேதி அறிவிப்பால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் இல்லை. அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் எந்த பெயரில் அமைக்கப்படுகிறது என்பது முக்கியம் இல்லை, அந்த அமைப்பில் அதிகாரம் மிக்கவர்கள் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார்.
தமிழிசை திடீர் பல்டி
தமிழக நலனில் பாஜக அக்கறையோடு இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறி வந்த தமிழிசை இன்று மத்திய அரசு எதை அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டூம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.