நாம் தமிழர், நோட்டா கூடவா காசு கொடுத்துச்சு... தமிழிசையை திகைக்க வைத்த கேள்வி!
சென்னை : தேசிய கட்சிக்கு வாக்களிப்பது தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் அது உணர்வுப்பூர்வ வாக்காக இருக்கும் ஆனால் வளர்ச்சிக்கான வாக்காக இருக்காது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது : 4 இடைத்தேர்தல்களில் மேற்குவங்கத்தில் 36 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது பாஜக. உ.பியில் ஒரு இடத்திலும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடத்திலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆர்கே நகரை குறியீடாக வைத்து பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.
தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்வது மற்ற மாநிலங்களில் வளர்ச்சியை எதிர்ப்பார்த்து மக்கள் தொடர்ந்து பாஜகவிற்கு வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆர்கே நகரில் நடந்தது தேர்தலே அல்ல. உண்மையான சமதளத்தில் தேர்தல் நடந்திருந்தால் மட்டுமே அதில் வாங்கிய வாக்குகள் சரியான குறியீடாக இருக்கும். பிரச்சாரம் முதல் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை எதிர்த்து போராடினோம்.
வாங்கப்பட்ட வெற்றி
பணத்தை சுருட்டி சுருட்டி மக்களுக்கு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் நடவடிக்கையே எடுக்கவில்லை, இது வாங்கப்பட்ட வெற்றி. ஆர்கே நகர் வாக்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
புனிதத்துவம் போல
மாற்று அரசியல் வந்து விட்டது போல சிலர் தங்களை முன் நிறுத்துகிறார்கள். 30 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழகம், அந்த குடும்ப உறுப்பினர் சிறையில் இருக்கிறார். ஆனால் இன்று புனிதத்துவம் பெற்று விட்டது போல வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, இந்த வெற்ற தமிழகம் முழுவதும் நிச்சயம் பிரதிபலிக்காது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தான் தொகுதிக்கு வெளியில் இருப்பவர்கள் கருதுகிறார்கள்.
மக்களை சிந்திக்க விடவில்லை
பாஜக ஒரு ஓட்டிற்கு கூட பணம் கொடுக்கவில்லை, நாங்கள் உண்மையாக போராடினோம். பாஜக வாங்கிய வாக்குகுளும் எங்களுக்கு கிடைத்த உண்மையான வாக்குகள் அல்ல, எங்களுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மக்களை சிந்திக்க விடவில்லை.
ஓட்டு போட்ட பின்பும் பணப்பட்டுவாடா நடந்தது, இந்த தேர்தலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் பாஜக வலுப்பெற தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வோம்.
சமாளித்த தமிழிசை
நாம் தமிழர் கட்சி, நோட்டா கூட அதிக வாக்குகள் பெற்றுள்ளன என்ற கேள்விக்கு தமிழிசை பதிலளிக்கையில். நாங்கள் தேசிய கட்சி நாம் தமிழர் கட்சியும் சில இடங்களில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தேசிய கட்சிக்கு வாக்களிப்பது தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் அது உணர்வுப்பூர்வ வாக்காக இருக்கும் ஆனால் வளர்ச்சிக்கான வாக்காக இருக்காது என்றும் தமிழிசை தெரிவித்தார்.