காவிரியில் துரோகம்- தமிழிசை சவுந்தராஜன் தலைமையில் கர்நாடகா தேர்தலில் தமிழக பாஜக கூண்டோடு பிரசாரம்!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் தமிழக பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என சொல்லியே காலம் கடத்தி ஏமாற்றி துரோகம் செய்துவிட்டது தமிழக பாஜக. இப்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் தமது தலைமையில் தமிழக பாஜகவினர் பிரசாரம் செய்வோம் என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என உறுதி தந்தது தமிழக பாஜக. இதற்காக ஒரு குழுவைக் கூட தமிழக பாஜக அமைத்தது.
இந்த குழுவும் டெல்லிக்கு போய் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தது. ஆனால் தமிழக பாஜகவின் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது டெல்லியில் உள்ள மத்திய பாஜக அரசு. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது டெல்லி.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக தமது தலைமையில் தமிழக பாஜகவினர் பிரசாரம் செய்வார்கல் என காவிரி பூமியான தஞ்சை மண்ணில் செய்தியாளர்களிடம் மனசாட்சியே இல்லாமல் அறிவித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். ஒருவேளை கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது அந்த ஆட்சி மூலம் தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தர திட்டமிட்டிருக்கிறதோ தமிழக பாஜக என்பதுதான் தெரியவில்லை.