தக்க நடவடிக்கை எடுக்கச்சொன்னா தக்கைய வச்சு நடவடிக்கை எடுக்குறாரு... செல்லூரை வாரும் தமிழிசை!
நீர் ஆதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கக்கூறினால் அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
சென்னை: நீர் ஆதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கக்கூறினால் அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் தர்மகோல் திட்டம் சொதப்பியதை தொடர்ந்து தமிழிசை இவ்வாறு விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார்.
அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு போர்த்தப்பட்டது. ஆனால் போர்த்தப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின.
அமைச்சரின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
நீர் ஆதாரங்களை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினால், அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக சாடினார். மேலும் 25ஆம் தேதி ஸ்டாலின் நடத்தவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்றது என்றும் தமிழிசை கூறினார்.