கிருஷ்ணசாமியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்.. சொல்கிறார் தமிழிசை
மிகத் துயரமான நேரத்தில் கிருஷ்ணசாமியின் மரணத்தை அரசியலாக்காதீர் என தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மிகத் துயரமான இந்த நேரத்தில் எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது, அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறோம், அதேவேலை இதை வைத்து தமிழக எதிர்க் கட்சி தலைவர், நீட் தேர்வு ஆண்டுதோறும் நரபலி கேட்கிறது என்று நாக்கு கூசாமல் பழி சொல்வது நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் தன் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்பதை உணர வேண்டும்.
சென்ற ஆண்டு நீட் தேர்வில் அனிதா வின் மரணம் நரபலி என குறிப்பிடும் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சியில் மீண்டும் மதுவை கொண்டுவந்ததால் இன்றும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சாராயத்தினால் தினம் தினம் பல உயிர்கள் இழந்து இளம் தாய்மார்கள் விதவைகளாக நிற்பதற்கு யார் காரணம்? இதற்கு சமீபத்திய உதாரணம் நெல்லை தினேஷ் மரணமே.
சென்ற ஆண்டு நீட் தேர்வால் தமிழகத்தில் 6510 ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது நிதர்சனம்.
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த திரு. கலைஞர் அவர்களின் சொந்த ஊரான இதே திருவாரூர் மாவட்டத்தில் நீட் வருவதற்கு முன்பு 2 பேர்க்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு வந்ததற்கு பிறகு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 28 கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு தான் தம்பி கஸ்தூரி மகாலிங்கம் போன்றவர்கள் இன்று நம்பிக்கையோடு நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
ஆக மிக துயரமான இந்த நேரத்தில் இந்த மரணத்தையும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழக எதிர்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.