தயவு செய்து செவிலியர்களிடம் கருணை காட்டுங்கள்.. தமிழக அரசுக்கு தமிழிசை வலியுறுத்தல்!
செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக இன்று போராட்டம் நீடிக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் போராட்டம் நடத்தி வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று கூறினார். அவர்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதாகவும் கர்ப்பிணிப் பெண்களும் பெரும் அவதியடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பெண்கள் செவிலியர்களிடம் தமிழக அரசு கருணை காட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
பெண்களை கொடுமைப்படுத்துவது நல்லதல்ல என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். எந்த அடிப்படையில் செவிலியர்களை வேலைக்கு எடுத்திருந்தாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.