திமுக கூட்டத்திற்கு தடை விதிங்க - தமிழிசை சவுந்தரராஜன்
திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் திருச்சியில் திமுகவினர் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜ ராஜன் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் திருச்சியில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினால் இன்று நீட் டிற்கு எதிறான திமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் https://t.co/DlIwEk0aW6
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) September 8, 2017
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களை திசை திருப்புகின்றனர். உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. எனவேதான் திமுக மக்களை திசை திருப்பும் வகையில் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பதிவிட்டதாக கூறினார்.
சுயநலத்திற்காக மக்களுக்கு எதிர்மறையாக அரசியல் நடத்துவதை ஏற்கமுடியாது என்றும் எதிர்கட்சியினர் பொய்யான தகவலை கூறுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.