சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.. விசிகவை எச்சரிக்கும் தமிழிசை!
வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்க்காது என தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
சென்னை: வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்க்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சியை தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
மெர்சல் பட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் கரூரில் பாஜக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழிசைக்கு எதிராக அங்கு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
தமிழிசைக்கு கறுப்புக்கொடி
இது கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை சென்ற தமிழிசைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர்.
இரு கட்சிகள் மோதல்
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
வேடிக்கை பார்க்கமாட்டோம்
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என அவர் கூறினார். விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சரியான நடைமுறை இல்லை என்றும் அவர் கூறினார்.
வன்முறை கூடாது
ஜனநாயக நாட்டில் கருத்து சொன்னால் எதிர் கருத்துதான் சொல்ல வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழிசை கூறினார். பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே தொடரும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.