பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியாகும்.. பணிகள் ஜரூர்
பிளஸ் 2 ரிசல்ட் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
சென்னை: பிளஸ் 2 ரிசல்ட் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ரேங்க் முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதாவது, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 16ஆம் தேதியும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1998ஆம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை அனுப்பி வந்தது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் முடிவுகள் ஒட்டப்படும். அவற்றை மாணவர்கள் பார்த்து வந்தனர். 2003ஆம் ஆண்டு முதல் அந்த நிலை மாற்றப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
2015ஆம் ஆண்டு முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்களிலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் தேர்வில் ரேங்க் அடிப்படையும் கைவிடப்பட்டது. அதாவது யார் முதல் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மாணவர்களின் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.