108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் !
சென்னை: தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி 108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்கள் வருகிற 8-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிர்வாகத்திடமும், ஊழியர்களிடமும் நவம்பர் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று காலை மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று போனஸ் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து ஊழியர்கள் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என ஜிவிகே இம்எம்ஆர்ஐ நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார்.