நாடே போற்றும் நம்ம அம்மா உணவகம் - சட்டசபையில் எஸ்.பி வேலுமணி பெருமிதம்
அம்மா உணவகம் திட்டத்தை நாடே பாராட்டுகிறது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டசபையில் கூறினார்.
சென்னை: சட்டசபையில் இன்று 2வது நாளாக உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது அம்மா உணவகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வந்து பார்வையிட்ட அதிகாரிகள் அம்மா உணவகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளனர் என்று கூறினார்.
சட்டசபையில் விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,
அம்மா உணவகம் நல்ல திட்டம் தான். ஆனால் இதற்கு உள்ளாட்சிகளில் இருந்து நிதி வழங்கப்படுகிறது. அது சரியல்ல. அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.
அமைச்சர் பதில்
அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறுக்கிட்டு பதில் அளித்தார். அம்மா உணவகம் ஏழை எளிய, மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியில் 407, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 247, ஊரக பகுதிகளில் 4 ஆக மொத்தம் 658 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.
சப்பாத்தி
அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு பொங்கல் மற்றும் பலவகை சாதங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் இரவு நேரங்களில் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாராட்டு
அம்மா உணவகம் திட்டத்தின் சிறப்புகளை கர்நாடகம், ஆந்திரம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல, எகிப்து நாட்டிலிருந்தும் கூட, அதன் அமைச்சர்களும், அதிகாரிகளும், நேரில் வந்து பார்வையிட்டு, அம்மா உணவகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளனர்.
வெளி மாநிலங்களில் அமல்
ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், அம்மாவின் உன்னதத் திட்டமான, அம்மா உணவகம் திட்டத்தை, தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளன.
கோடி கோடியாக விற்பனை
இதுவரை தமிழகத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக ரூ. 41.67 கோடிக்கு இட்லிகளும்,ரூ. 15.55 கோடிக்கு பலவகை சாதங்களும் ரூ.19.56 கோடிக்கு சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும்,இதனால் நாள் ஒன்றிற்கு 3.5 லட்சம் பொதுமக்கள் பயனடைவதாகவும்,அமைச்சர் வேலுமணி கூறினார். இந்த திட்டத்திற்கு அரசு மானியம் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி உள்ளோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.