ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
சென்னை: 15வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது.
15ஆவது சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபையின் முதல் கூட்டம், கடந்த மாதம் 25ம் தேதியன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 232 தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதியன்று நடந்த சட்டசபை கூட்டத்தில், சட்டசபை தலைவராக தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு, சட்டசபை கூட்டம் ஜூன் 16ம் தேதியன்று நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
பேரவைத் தலைவரின் அறிவிப்புப்படி, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் கே.ரோசய்யா இன்று உரை நிகழ்த்தினார். சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையாற்ற வருகை தந்தார். அவருக்கு அனைத்து கட்சிகளின் சார்பில் வரவேற்பு தரப்பட்டது.
வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பித்த ரோசய்யா, பின்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட உரையை அவர் வாசித்தார். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை, ஜல்லிக்கட்டு விளையாட்டை திரும்ப கொண்டுவர நடவடிக்கை என்பது போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அரசின் நல திட்டங்கள் குறித்து ரோசய்யா உரையில் குறிப்பிட்டபோதெல்லாம், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பிற்பகலில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இதில் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இந்த கூட்டத் தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளும்-எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றுவர். இந்த விவாதங்களுக்கு தமிழக அரசு சார்பில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.
பல்வேறு முக்கிய பிரச்னைகளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசுத் தரப்பிலும் அந்த விவாதங்களுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், பேரவை கூட்டத் தொடர் விவாதங்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.