இது உங்களுக்கே நல்லா இருக்கா தமிழக பாஜக & தமிழிசை மேடம்?
தமிழக மக்களையும், அரசியல் கட்சியினரையும் நக்கலடிப்பதையும் நையாண்டி செய்வதையுமே தமிழக பாஜக வாடிக்கையாக வைத்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக மக்களையும், அரசியல் கட்சியினரையும் நக்கலடிப்பதையும் நையாண்டி செய்வதையுமே தமிழக பாஜக வாடிக்கையாக வைத்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள், விவசாயிகள், மற்றும் அரசியல் கட்சியினரை நக்கலடிப்பதையும் நையாண்டி செய்வதையும் தமிழக பாஜக தலையாய கடமையாக கொண்டுள்ளது.
மக்கள் நலனுக்கான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி கேலி செய்வதும் இழிவுப்படுத்தும் வகையில் பேசுவதுமே தமிழக பாஜக தலைவர்களின் முக்கிய பணியாக உள்ளது.
எச் ராஜா மிரட்டல்
குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கருத்துக்கூறிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என மிரட்டும் வகையில் பேசினார்.
கடல் நீரை குடியுங்கள்
தமிழக பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி தமிழக மக்களுக்கு காவிரி நீரெல்லாம் கிடைக்காது வேண்டுமானால் கடல் நீரை குடியுங்கள் என்று கூறி இழிவுபடுத்தினார்.
தமிழிசை கிண்டல்
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்குள் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என நக்கலாக பதிலளித்தார். இன்று முதல்வர், துணை முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரம் மேற்கொண்டிருப்பதையும் தமிழிசை கிண்டலடித்துள்ளார்.
உண்ணாவிரதம்
அதாவது அதிமுக எம்பிக்களுக்கு அவர்களின் பதவியை ராஜினாமா செய்யக்கூட மனம் வரவில்லை, இதில் முதல்வரும் துணை முதல்வரும் உண்ணாவிரதம் இருக்கின்றனர் என கிண்டலடித்துள்ளார்.
போராடும் நிலைக்கு
தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களையும் இழிவு படுத்தி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மாநிலங்களின் பிரச்சனையை தீர்த்து வைக்காமல், உரிமைகளை பெற மக்களை போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
முதன்மை நோக்கமா?
மாநில அரசுகளின் பிரச்சனைகளை தீர்க்க இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள், அதேநேரத்தில் உரிமைக்காக போராடுபவர்களை கிண்டல், கேலி, நையாண்டி என இழிவு படுத்துவார்கள். இதுதான் மத்தியில் ஆளும் பாஜகவின் முதன்மை நோக்கமா?