பாஜகவுக்கு நேரம் சரியில்லை.. விலகினார் தமிழக மகளிரணி மாநில செயலாளர் ஜெமிலா!
தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் ஜெமிலா கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை: தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளரான ஜெமிலா கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
டாக்டரான ஜெமிலா கடந்த 2015ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளராக பதவிகள் வழங்கப்பட்டன.
பாஜகவின் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார் ஜெமிலா. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பில் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக பேசிவந்தார். அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கட்சியின் தற்போதைய கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றும் அதனால் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நலன் சார்ந்த சேவை இயக்கங்களில் முழு மூச்சாக இறங்கப்போவதாகவும் ஜெமிலா கூறியிருக்கிறார். மாட்டிறைச்சி, மெர்சல் படம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவினர் நிலைப்பாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.