ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை.. 7 தமிழர் விடுதலையில் முக்கிய முடிவு?
சென்னை: நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. அப்போது ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய சட்டப்பிரிவு 161ன்கீழ் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால்தான், ஆளுநர் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மாநில அரசின் பரிந்துரையை ஏற்பாரா இல்லையா என்பது ஆளுநர் கையில்தான் உள்ளது.