ராஜாஜி, காமராஜர், அண்ணா… சென்னை மாகாணம் தொடங்கி தமிழகத்தை இதுவரை ஆண்ட முதல்வர்கள்
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தினை இதுவரை 20க்கும் மேற்பட்டோர் ஆட்சி செய்திருந்தாலும் அவர்களில் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள்தான் இன்றைக்கு பலருக்கும் தெரிகிறது.
முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேரிட்டதை அடுத்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவி தேடி வந்துள்ளது. சென்னைமாகாணமாக இருந்தது தொடங்கி தற்போது தமிழகமாக மாறியது வரை ஆண்ட முதல்வர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சென்னை மாகாணம்
தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது.
சென்னை மாகாணத்திற்கு 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பனகல் அரசர்
அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.
1927ல் தேர்தல்
சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.
காங்கிரஸ் ஆட்சி காலம்
1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜகோபாலாச்சாரியார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான்.
குமாரசாமிராஜா
1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.
முதல்வர் ராஜாஜி
இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சிகளின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.
காமராஜர் காலம்
அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ணகிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங்கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவையாகும்.
தமிழகத்தின் பொற்காலம்
மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வர்
முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகியதால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.
அண்ணாவின் ஆட்சிக்காலம்
1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.
5முறை முதல்வரான கருணாநிதி
அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76 வரை முதல்வராக இருந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் மறைவினை அடுத்து 1989-91, 1996-2001, 2006 -2011 வரை 5 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம்
திமுகவில் இருந்து விலகிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். 30-06-1977 முதல்
17-2-1980 வரை, 09-06-1980 முதல் 15-11-1984 வரை, 10-02-1985 முதல் 24-12-1987 வரை மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் 07-01-1988 முதல் 30-01-1988 வரை முதல்வராக பதவி வகித்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலம்
அதிமுக இரண்டாக உடைந்து ஜெ அணி, ஜானகி என பிரிந்த பின்னர் அதிமுகவிற்கு தோல்வியே கிடைத்தது. பின்னர் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தன. 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 24-06-1991 முதல் 12-05-1996 வரையும், 14-05-2001 முதல் 21-09-2001 வரையும் முதல்ராக பதவி வகித்தார். பின்னர் டான்சி வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து ஜெயலலிதா பதவி விலகினார்.
ஒ.பன்னீர் செல்வம்
இதனையடுத்து வருவாய்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் 21-09-2001 முதல் 01-03-2002 வரை பதவி வகித்தார்.
மூன்று முறை முதல்வர்
டான்சி வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் 02-03-2002 நாளில் முதல்வராக பதவியேற்றார். 12-05-2006 வரை முதல்வராக இருந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 16-05-2011 முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து 27-09-2014 நாள் பதவி விலகினார். இதனையடுத்து மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.