ஓகியில் இறந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ20 லட்சமாக உயர்வு- முதல்வர் எடப்பாடியார்
ஓகி புயலால் இறந்து போன மீனவர்களுக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் இறந்துபோன மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடியார் அறிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் மிகுந்த பாதிப்பு அடைந்தது. மேலும், கடலின் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணாமல் போயினர். இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும் காணாமல் போன மீனவர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் எழுந்து வந்தது. இந்நிலையில், சில மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதால் மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
மேலும், இறந்து போன மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தொகையும் போதுமான அளவு இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் பதிலளிக்க 20ம் தேதி வரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
புயல் தாக்கி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரடியாக மக்களை சென்று சந்திக்காதது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீனவ கிராமங்கள், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பிறகு மீனவர் பிரதிநிதிகளிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்து போன மீனவர்களுக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் உதவித்தொகையை ரூ20 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். மேலும், இறந்துபோன மீனவர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
புயல் பாதித்த முதல் நாளில் இருந்தே தான் அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கி வந்ததாகவும் முதல்வர் தெரிவித்தார். மேலும், காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடரும் என்றும், ஊனமுற்ற மீனவர்களின் மறுவாழ்வுக்கு திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.