பன்முகத்தன்மை கொண்ட ஞாநியின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பு: முதல்வர் எடப்பாடி
மூத்த பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை: மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று காலை காலமானார். பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் ஞாநியின் மரணம் பத்திரிகை துறைக்கு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் உடல் நிலை பாதிப்பால் இன்று அதிகாலை காலமானார். இவரது உடல் சென்னை கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
ஞாநியின் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாநியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பன்முகத்தன்மை கொண்ட ஞாநி
"மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞானி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். ஞாநி, பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர்.பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவரும், கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடிய பண்பாளருமான ஞாநியின் மறைவு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத ‘ஓ பக்கங்கள்’
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஞாநியின் இறப்பு தாங்க முடியாத வருத்தத்தை தந்து இருக்கிறது. அவரின் எழுத்தில் வெளியான ‘ஓ பக்கங்கள் மூலம் அவர் சமுதாயத்தின் மனச்சாட்சியை உலுக்குகிற விதத்தில், சமூக அரசியல் கல்வி வாழ்வியல் குறித்து எழுதி வந்தது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை ஏடுகளில் எழுதவும் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கேள்வியும் பதிலுமாகத் தருவதும் ஞாநி அவர்களின் இயல்பான ஆற்றல் ஆகும். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இதழியலுக்கும் தொலைக்காட்சி ஊடகத் துறைக்கும் அரிய சேவை ஆற்ற வேண்டிய அன்புச் சகோதரர் ஞாநி சங்கரன் மறைவு, பத்திரிகைத் துறைக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகவே எண்ணி வருந்துகிறேன்,
ராமதாஸ் இரங்கள்
பாமக நிறுவனர் ராமதாஸ், ஞாநியின் மறைவு பத்திரிகை உலகின் மிகப்பெரிய இழப்பு. பல பத்திரிகைகளில் பணி புரிந்தாலும் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத மனப்பான்மை, தனித்தன்மை, எழுத்துலகில் நேர்மை என பல தனிப்பட்ட நல்ல குணநலன்களை கொண்டு இருந்தவர். பத்திரிகை உலகில் மட்டுமன்றி சிறந்த நாடக ஆசிரியராகவும் செயல்பட்டவர். சமகால அரசியல் குறித்தும், பாமகவின் அரசியல் கொள்கைகள் குறித்தும் என்னோடு பலமுறை விவாதித்தவர் இன்று இல்லை என்கிற செய்தி என்னை வருத்தமடைய செய்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
ஈடு செய்ய முடியாத இழப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் தருகிறது. அவரது இழப்பு பத்திரிகை குடும்பத்திற்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.
|
சிறந்த அரசியல் விமர்சகர்
பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மறைந்த செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.