குழித்துறையில் ரயில் மறியல் போராட்டம்... முதல்வர் அவசர ஆலோசனை!
குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சென்னையில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
Recommended Video
சென்னை : குழித்துறையில் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓகி புயலில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்பதை அரசு தெளிவுபடுத்தக் கோரி குமரியில் 8 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி பேரணியாக சென்றனர்.
வழிநெடுகிலும் மீனவர்கள் குடும்பத்துடன் வந்து பேரணியில் இணைந்து கொண்டனர். பேரணி இறுதியாக குழித்துறை ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 மணி முதல் நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்றது. பெண்கள் தண்டவாளத்திலேயே தலைவைத்து படுத்திருந்தனர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டும் போராட்டத்தை நடத்தினர்.
மீனவர்களின் ரயில் போராட்டத்தால் திருவனந்தபுரம் வழியாக தமிழகத்திற்கு வரும் ரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. முன்னதாக குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் பழனிசாமி சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.