காவிரியில் தண்ணீர் திறப்பீங்களா, இல்லையா? நேரில் சென்று சித்தராமையாவிடமே கேட்க எடப்பாடியார் முடிவு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு அந்த மாநில அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலருக்கு கடிதம் மூலமும் தொலைபேசியிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பா பயிரை காக்க காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் சித்தராமையாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தவே நேரம் கோரப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயில் நீரின்றி வாடி வருகின்றன. பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே சித்தராமையாவை சந்தித்து தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வருக்கு பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று சித்தராமையா பதிலளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.