திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த உள்குத்தா? பின்னணி காரணம் என்ன?
Recommended Video
சென்னை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை நடுவே முந்தைய காலங்களை போல ஒரு இணக்கம் இல்லை என்று தெரிய வருகிறது.
இது இரு கட்சிகளுக்குமே தலைவலியை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சாமி வரம் தந்தாலும், பூசாரி வரம் தரவில்லை என்று சொலவடை கூறுவார்கள். அப்படித்தான் இவ்விரு கட்சி கூட்டணியும் உள்ளது.
இடைவெளி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் என்னதான் நெருக்கமாக முயன்றாலும், காங்கிரசில் தமிழகத்திலுள்ள சில மூத்த தலைவர்கள், இதில் முள் வெட்டிப் போடும் பணியை செவ்வனே செய்து வருகிறார்களாம். காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்குமே திறமையான மூத்த தலைமை காலங்கள் முடிவடைந்து, புதிய தலைவர்கள் பொறுப்புக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில், ஏற்பட்டுள்ள சுணக்கம், இரு கட்சி கூட்டணியையும் விரும்புவோருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்புபோல் இன்று இல்லை
தமிழக காங்கிரஸ் கட்சியின் முந்தைய தலைமையிடம் நெருங்கியதைப் போல இப்போதுள்ள தலைமையில் திமுக நெருங்க முடியவில்லை, நெருங்க விருப்பமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலதுசாரி சிந்தனையாளர்களாக இருப்பதுதான்.
வலதுசாரி கொள்கை
பாஜகவில் இருந்து வந்தவர்கள், ரஜினிகாந்த்துக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் இப்போது காங்கிரசில் கோலோச்சுவதாகப் புலம்புகிறார்கள், நீண்ட நெடிய காங்கிரஸ் புள்ளிகள். இவர்களுக்கு இயல்பாகவே திமுகவை கண்டால் பிடிக்காது. புதிய தலைமை திமுகவிற்கு வந்துள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி கூட்டணியைக் குழப்ப பெரும் முயற்சிகளை இவர்கள் எடுத்து வருகிறார்கள். ராகுல் காந்தியையும் ஓரளவுக்கு இவர்கள் பேச்சுக்களை ஏற்கும் நிலைக்கு மாற்றியுள்ளனர்.
கூட்டணிக்கு வேட்டு
திமுக தவிர்த்து, கமல்ஹாசன், தினகரன் போன்றோர் கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை மேலிடத்திற்கு பாஸ் செய்வது இந்த கோஷ்டிகள்தானாம். ஏற்கனவே, இதுதொடர்பான சில சந்திப்புகளும் நடந்துள்ளன. எனவேதான் தமிழக காங்கிரஸ் நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவின் தலைவர்கள் செல்வதை தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த்துக்கும், வலதுசாரிகளுக்கும் ஆதரவு அளிப்போருடன் நமக்கு ஏன் ஒட்டு தேவை என்று கேட்கிறார்கள் திமுக பெரும்புள்ளிகள். ஆனால், திமுக தலைவர்கள் காங். கூட்டங்களுக்குச் செல்லாதது இப்போது வெளிப்படையாகச் சர்ச்சை பொருளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணியை மேலும் பலவீனப்படுத்த காங்கிரசுக்குள் உள்ள சில வலதுசாரிகள் விரும்புவதாக இரு கட்சியினருமே பல்லைக் கடிக்கிறார்கள். இதெல்லாம் எங்கோ போய் நிற்குமோ?