உடைகிறதா தமிழக காங்கிரஸ்?: தனிக் கட்சி தொடங்குவாரா ஜி.கே.வாசன்?!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் அடையாள அட்டையில் மூப்பனார் படத்துக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்ததால் ஜி.கே.வாசன் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது பதவியை நேற்று திடீர் ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து மோதல்
மீனவர் பிரச்னை, நாடாளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஜி.கே.வாசனுக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதனால் அவ்வப்போது ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது.
மூப்பனார் பட விவகாரம்
இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில் திடீரென மூப்பனார் படத்தை சேர்த்தது வாசன் தரப்பு. மூப்பனாரை மட்டும் சேர்த்தால் பிரச்சனை வரும் என்பதால் காமராஜர் படத்தையும் சேர்த்தனர். ஆனால், மூப்பனார் படத்தை போடக் கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் தடை விதித்தது. ஆனால் இதை வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகன் ஏற்க மறுத்துவிட்டார்.
வாஸ்னிக்குடன் மோதல்
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் ஞானதேசிகன் கடுமையாக மோதியுள்ளார். ஆனால் முகுல் வாஸ்னிக் மூப்பனார் படத்தைப் போடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
காங்கிரஸ் மேலிடம் பிடிவாதம்
இதனைத் தொடர்ந்து சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை ஞானதேசிகன் சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார் ஞானதேசிகானர். இருப்பினும் மூப்பனார் படத்தைப் போட அனுமதிக்க முடியாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருந்தது. மேலும் வாசன் தரப்பை அடக்கி வைக்கும் வகையில், பதவியை ராஜினாமா செய்யுமாறும் ஞானதேசிகனிடம் சோனியா கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
ராஜினாமா
இதனால் சென்னை திரும்பிய ஞானதேசிகன் ஜி.கே.வாசனை சந்தித்த பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஜி.கே.வாசன் அதிருப்தி
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த நிலைப்பாட்டில் மூப்பனாரின் மகனான ஜி.கே.வாசன் கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. இது வெறும் மூப்பனார் படத்தால் ஏற்பட்ட பிரச்சனை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் வாசனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உரிய மரியாதை தரப்பாடாததால் ஏற்கனவே தனிக் கட்சி தொடங்குமாறு வாசனின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பொறுமை காக்குமாறு மட்டுமே அவர்களிடம் வாசன் கூறி வருகிறார்.
உடைகிறது காங்கிரஸ்
இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை உள்ளது. ஜி.கே.வாசன் தரப்பினர் தாங்களே உண்மையான காங்கிரஸ் என்று பிரகடனம் செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இது வெறும் மூப்பனார் படத்தால் ஏற்பட்ட பிரச்சனை அல்ல, ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் புகைந்து கொண்டிருந்த நிலையில் தான், அடையாள அட்டையில் மூப்பனார் பெயரை சேர்க்கச் சொல்லி வாசன் குரூப் பிரச்சனையை ஆரம்பித்தது. இதை தலைமை ஏற்காது என்பது வாசன் தரப்புக்கு நன்றாகவே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.