தமிழகம் முழுக்க வெளுத்து வாங்கும் கன மழை.. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
காவிரி நீர்பிடிப்புப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழையின் எதிரொலியாக தமிழக அணைகள் நிரம்பி வருகின்றன.
சென்னை : காவிரி நீர்பிடிப்புப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழையின் எதிரொலியாக பில்லூரி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரையடுத்த தேனவயல் ஆதிவாசி குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் நள்ளிரவில் அருகில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்திற்கு பாதுகாப்பாக 20 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நீலகரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தேவாலா நடுவட்டம் ஓவேலி தேவர்சோலை சுற்றுவட்ட பகுதிகளில் இரண்டாம் நாளாக தொடர் மழை பெய்து வருகிறது.
கூடலூரில் 55 மில்லிமீட்டர் மழையும், அதிகபட்சமாக பந்தலூரில் 176மிமீ மழையும் பதிவாகியுள்ளது.தேவாலா அட்டி சோலவயல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் பாலம் உடைந்ததால் கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நிலவரம்
குமரிமாவட்ட அணைகளைப் பொறுத்தவரையில் பேச்சிப்பாறை அணை மொத்த கொள்ளளவான 48 அடியில் தற்போது வரை 21 அடி நீர் வரத்து உள்ளது, அணைக்கு வினாடிக்கு 2086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி மொத்த கொள்ளளவான 77அடியில் தற்போது 45.10 அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1255 கன அடி வெளியேற்றப்படுகிறது.
பில்லூர் அணையில் வெள்ளப்பெருக்கு
கடந்த 10 நாட்களாக தமிழகம், கேரளாவில் கனமழை பெய்ததையடுத்து பில்லூர் அணை நிரம்பியதால் நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அருவியில் குளிக்கத் தடை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சக்திவேல் வால்பாறையில் பெய்துவரும் மழையினால் ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக அருவியில் குறிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவான 52 அடி நீர் இருப்பில் 51 அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பள்ளிகள் விடுமுறை
வால்பாறையில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம்
உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக அருவிக்கு செல்ல அறநிலையத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கடலூரிலும் விடுமுறை
இதே போன்று கனமழை காரணமாக கடலூர், பந்தலூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம் அணை
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2804 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் நேற்று ஒரே நாளில் 5.2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது . 20 நாட்களில் அணையின் நீர்மட்டம் 33 அடி உயர்ந்து தற்போது 83.80 அடியாக உள்ளது
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 22 அடி உயர்ந்துள்ளது அணைக்கு வினாடிக்கு 1913 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை காரணமாக அணைகளின் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூரில் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 4000 கனஅடியில் இருந்து 2000 கனடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,523 கனஅடியில் இருந்து 6,660 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.16 அடியில் இருந்து 77.39 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் நீர்மட்டம் 77.39 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரைவிட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்களின் வழியாக 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, அணைக்கு நீர்வரத்து 6,660 கனஅடியாகவும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39.405 டிஎம்சி ஆகவும் உள்ளது.