திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது : ஹெச்.ராஜா
திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது என்று ஹெச்.ராஜா தெரிவித்து உள்ளார்.
சீர்காழி : திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது என்று பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்து உள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 128-வது ஜெயந்தி விழா சீர்காழி அருகே எருக்கூரில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு, நீலகண்ட பிரம்மசாரியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை வெளியேற்றப் பாடுபட்டவர்களில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் போன்று நீலகண்ட பிரம்மசாரியும் முக்கியமான நபர். இது போன்று சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இவர்களின் வரலாற்றை பாடத்திட்டங்களில் தமிழக அரசு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஓகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்த கேள்விக்கு, கடலில் மாயமான 122 மீனவர்கள் மத்திய பேரிடர் பாதுகாப்பு குழுவினர், கடலோர காவல் படையின் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மீனவர்களையும் மீட்கும் முயற்சியில் கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டு உள்ளது என்றார்.
மேலும், கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் சுவாமி விக்கிரகங்களுக்கு பதிலாக போலி விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன சிலைகளின் மதிப்பு ரூ.900 கோடி என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
விலையுயர்ந்த சுவாமி விக்கிரகங்களை பாதுகாக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. இதுபோன்று சீர்காழி கோவிலில் திருடப்பட்ட சுவாமி சிலைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், இந்து கோவில்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றோர், ஆன்றோர் தனித்து இயங்கும் வாரியத்தினை அமைக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில் தான் தமிழகத்தின் எழுச்சியுள்ளது. 50 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் பின்னடைவை மட்டுமே சந்தித்துள்ளது. எனவே, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க , அ.தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போடாமல் பா.ஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.