அரசு அதிகாரிகளிடமே செல்போனில் பணம் திருட்டு.. பணம் திருடுபோனால் உடனே இதை செய்ங்க.. டிஜிபி அட்வைஸ்
சென்னை: உங்கள் பணத்தை எத்தனை வகைகளில் எல்லாம் திருடலாம் என்பது குறித்தும் அதற்கு பொதுமக்கள் செய்ய வேண்டியது குறித்தும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் அந்த பிரிவுக்கு போதுமான போலீஸார் உள்ளனரா என்பது குறித்தும் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சைபர் கிரைம் என்பது எதிர்கால குற்றங்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் எதிர்பாராத இதுவரை நாம் சந்திக்காத குற்றங்கள்.
பல்வேறு வகையில் வந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டு எளிதாக உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்துக் செல்கிறார்கள். தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களிடமும் அவர்களுடைய உயரதிகாரிகள் பேசுவது போல் ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.
அது போல் மேட்ரிமோனியில் திருமண வரன் பார்ப்பதாக பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து பேசி பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்துள்ளார்கள். இவர்கள் தொழில் முனைவோரையும் விட்டு வைக்கவில்லை. அதாவது புதிதாக இந்த தொழிலை செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி பணம் பறிப்பது, அது போல் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பாஸ்போர்ட், விசா எடுக்க குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறு கூறி பணத்தை திருடுகிறார்கள்.
இப்படி திருட்டுகள் பல வகைகளில் இருக்கும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஒரு வேளை இது போன்ற நபர்களிடம் மக்கள் பணத்தை தவறவிட்டிருந்தால் உடனே 1930 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்ளும்போது சென்னையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பணம் வேறு வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தலாம்.
அவர்களது கணக்கிற்கே திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதை 24 மணி நேரத்திற்குள் பொதுமக்கள் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. 9 மாநகர காவல் ஆணையரகங்களில் சைபர் குற்றப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவிலான குற்றங்களைக் கண்டுபிடிக்க சிபிசிஐடியிலும் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநில சைபர் கட்டுப்பாட்டு மையம் உள்ளது. அதில் ஒரு ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகிறார். சர்வதேச அளவில் இன்டர்நேஷ்னல் போலீஸாரை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்பதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு பணத்தை இழக்க நேரிட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பெரிய குற்றவாளி கும்பலை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 26 ஆயிரம் சிம் கார்டுகள், 1200 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டுமே 5 கோடி ரூபாய் மதிப்பிலான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 32 லட்சம் ரூபாய் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
செல்போனிலும் காவல் உதவி செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் அதை பதிவிறக்கம் செய்யலாம்.66 வகையான காவல் துறை செய்ய வேண்டிய பல்வேறு உதவிகள் இந்த ஒரு செயலியில் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடைய வேண்டும் என சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.