17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை: மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் 17 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். உண்ணாவிரதம், மனித சங்கிலி, கடவுளுக்கு பலூன் மூலம் கோரிக்கை, மருத்துவரை உயிரோடு சமாதி கட்டுதல் போன்ற நூதன போராட்டங்கள் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் புறநோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள் என பலரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தனர். இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு ஹைகோர்ட் நீதிபதிகள் இன்று கூறி இருந்தனர். அதேபோல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்களுடன் மீண்டும் சுகாதரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அனைத்து மருத்துவ சங்க பொது செயலாளர் பாலகிருஷ்ணன், மருத்துவர்கள், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளது.
மருத்துவர்களின் அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாகவும் கூறினார். மேலும் போராட்டத்தால் மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நீதிமன்ற கோரிக்கையை ஏற்று போரட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அனைத்து மருத்துவர்களும் நாளை முதல் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.