பொங்கலின் போது தமிழர்கள் விரும்புவது "சரக்கா, ஜல்லிக்கட்டா?"... என்னா ஒரு பட்டிமன்றம்!
தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பொங்கலின் போது தமிழர்கள் விரும்புவது சரக்கா, ஜல்லிக்கட்டா என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : குடிமகன்கள் சார்பாக சென்னை அம்பத்தூரில் ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல் திருநாளில் தமிழர்கள் பெரிதும் விரும்புவது சரக்கா ஜல்லிக்கட்டா என்ற தலைப்பில் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் இந்த பட்டிமன்றம் அம்பத்தூரில் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பணியில் காளை வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதே போன்று காளை வளர்க்கும் மாடுபிடி வீரர்களும் முழுவேகத்தில் ஜல்லிக்கட்டு களமாடத் தயாராகி வருகின்றனர்.
மதுரையில் ஜனவரி 14 முதல் 3 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடைசி நேரம் வரை ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா, நீதிமன்றம் அனுமதி அளிக்குமா அளிக்காதா என்ற எதிர்பார்ப்புகளின்றி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியால் தென்மாவட்டங்களில் பொங்கல் திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.
டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு
இதே போன்று வழக்கம் போல ஒவ்வொரு பண்டிகைக்கும் டார்கெட் வைத்து விற்கப்படும் டாஸ்மாக் சரக்குகளுக்கும், அநேகமாக இரண்டு நாட்களில் டார்கெட் வைக்கப்பட்டு விடும். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் அதற்கு முந்தைய நாளில் டாஸ்மாக் விற்பனை விர்ரென ஏறும்.
மது விற்பனையில் முதலிடம்
புத்தாண்டன்று விற்பனை கடந்த ஆண்டை மிஞ்சியதைப் போல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனை எப்படி இருக்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் எதில் முன்னேற்றம் வருகிறதோ இல்லையோ டாஸ்மாக் விற்பனையில் முதலிடம் பெற்று முன்னேற்றம் அடைந்துவிடுகிறோம்.
வித்தியாசமான பட்டிமன்றம்
எல்லாவற்றிற்கும் சங்கம் வந்துவிட்ட காலத்தில் தமிழ்நாடுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் இந்த ஆண்டு பொங்கல் பட்டிமன்ற களத்தில் குதிக்கிறது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா?பொங்கல் திருவிழாவின் போது தமிழர்கள் விரும்புவது சரக்கா, ஜல்லிக்கட்டா என்பது தான் அந்த தலைப்பு.
முதல் பட்டிமன்றம்
ஜனவரி 15ம் தேதி சென்னை அம்பத்தூர் கொரட்டூரில் இந்த பட்டிமன்றம் நடக்க இருக்கிறது. தமிழக வரலாற்றிலே தமிழ் குடிமகன்களின் கார்பக நடைபெறும் முதல் பட்டிமன்றம் இது ஆதரவு தாருங்கள் என்று இதற்கு விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது. எத்தனையோ தலைப்புகளில் பட்டிமன்றம் கேட்டு நல்ல நாளை கொண்டாடியவர்களுக்கு இந்த தலைப்பு சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.