குடிகாரர்களை மதிங்கப்பா.. கட்டிங் குடிக்க முடியலை.. சங்கத்தார் சலம்பல்!
மது மற்றும் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து மதுக்குடிப்போர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை : டாஸ்மாக்கில் மது விலை மற்றும் நியாயவிலைக்கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
கடந்த மாதத்தில் டாஸ்மாக்கில் மது மற்றும் பீர் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதனால் குடிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையையும் இரண்டு மடங்கு உயர்த்தியது தமிழக அரசு. இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தற்போது மழை பெய்வதால் சரக்கு மற்றும் சர்க்கரை வாங்க முடியாமல் ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாவர்கள். அதனால் டிசம்பர் வரை விலை உயர்வை நிறுத்திவைக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் ஆர்ப்பார்ட்டம் நடத்த உள்ளனர்.
விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் நிறுவனதலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம். ‘ தமிழக அரசு ஏழை எளிய மக்களின் வாழ்வாதரத்தை பெருமளவு சிதைத்துவிட்டது. சரக்கு மற்றும் சர்க்கரை விலை உயர்வு எங்களைப் பெரிதும் பாதித்து இருக்கிறது. அதனால் வருகிற 13ம் தேதி திருப்பூரில் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கரும்பு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்
கரும்பின் மூலப்பொருட்களில் இருந்து தான் சர்க்கரையும், சரக்கும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இரண்டையும் தயாரித்து விற்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஆனால், விவசாயிகளைத் தவிக்கவிட்டு விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு தகுந்த விலை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி போராட உள்ளோம்.
தொழில்கள் பாதிப்பு
தற்போது பெய்து வரும் மழையால் கூலித்தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்களின் தேவைக்கு சரக்கு வாங்கவும், குடும்பத்திற்கு சர்க்கரை வாங்கவும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சரக்கு மற்றும் சர்க்கரை விலை உயர்வை வருகிற டிசம்பர் மாதம் வரை நிறுத்திவைக்கவேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கை.
குடிகாரர்களை மதிக்காத அரசு
இந்த அரசின் மொத்த வருமானமே எங்களைப் போல கூலித்தொழிலாளர்கள் குடிப்பதால் வருவது தான். அதைவைத்து தான் பட்ஜெட் போடுகிறார்கள். ஆனால், எங்களுக்கு கொஞ்சம்கூட மரியாதையே இல்லை. தமிழகத்தில் 61.4% பேர் மது குடிக்கிறார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் தினக்கூலிகள். அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடக்க இருப்பதாக செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.