‘குடி’மகன்கள் கைவிட மாட்டார்கள்... தஞ்சையில் களமிறங்கும் மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!
தஞ்சை: தஞ்சாவூர் தொகுதி சட்டசபைத் தேர்தலில் ஆறுமுகம் என்ற வேட்பாளரை மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பெருமளவில் பணம் வினியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பிற தொகுதிகளுக்கு மட்டும் அறிவித்த தேதியில் தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்ததும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேடபாளர் சீனிவேல் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 19ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் அதிமுகவும், திமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.
இந்நிலையில், தஞ்சை தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் தங்களது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக ஆறுமுகம் (49) என்ற வேட்பாளர் களமிறங்குகிறார்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "தஞ்சையில் தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் வாடினாலும், 'குடி'மகன்கள் தாராளமாக தண்ணீரில் (மதுவில்) மிதக்கின்றனர். எனவே, நிச்சயம் அவர்கள் எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் திமுக சார்பில் மருத்துவரான அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் ரெங்கசாமி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.