அண்ணாச்சி கடைகள் பழசு... ஆன்லைன் ஷாப்பிங்தான் ரவுசு.. மாறிவரும் தமிழக நுகர்வோர் கலாசாரம்!
சென்னை: கடைகளில் சென்று பேரம் பேசி பொருட்கள் வாங்கிய சமூகம் விடைபெற்றுக்கொண்டே வருகிறது. பேரம் பேசுவதை கவுரவ குறைச்சலாக கருதும் இளம் சமுதாயம் உள்ள இந்த நாட்டில் இனிமேல் ஆன்லைன் ஷாப்பிங்குகள் முக்கிய இடத்தை பிடிக்கும் என்கின்கின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
"யக்கா.. கீர வெல கேட்டா, யான வெல சொல்றிய... கொஞ்சம் கொறைச்சிப்போட்டு குடு". "இந்தா... இவ்ளோ சாமான் வாங்கியிருக்கனே.. கொஞ்சம் கொசுரு போட்டாதான் என்ன?" என்பது போன்ற குரல்கள் ஒலிக்காத சந்தைகளோ, அண்ணாச்சி கடைகளோ தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் அதெல்லாம் ஒரு காலம்ப்பா, என்று தனது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க தயாராகிவருகிறது இன்றைய இளம் தலைமுறை.
ஆன்லைன் ஷாப்பிங்கின் வளர்ச்சி
இதற்கெல்லாம் காரணம், ஆன்லைன் ஷாப்பிங்கின் அபார வளர்ச்சிதான். இணையதள வசதி மட்டும் இருந்தால் போதும், கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்தபடி பொருட்களை பார்த்து, நமக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவதுதான் ஆன்லைன் ஷாப்பிங். ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கும் பொருளுக்கு பண அட்டைகள் மூலமாக கட்டணத்தை செலுத்தலாம் என்பது மட்டுமின்றி, பொருள் கைக்கு வந்து சேர்ந்த பிறகு கூட கட்டணத்தை செலுத்தவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நேரம் மிச்சம்
கடைகளை தேடி அலைவது, அங்கு சென்று பொருட்களை வாங்க கியூவில் நிற்பது, பில்போட காத்திருப்பது என நேர விரையத்தை ஏற்படுத்துவதற்கு மாற்றாக, உட்கார்ந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்க வழி செய்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். மளிகை பொருட்கள் பிரபலமாகாவிட்டாலும், ஷூவில் இருந்து, லேப்டாப் வரை எதையும், எப்போது வேண்டுமானாலும் ஆர்டர் செய்ய ஆன்லைன் வர்த்தகம் உகந்த வழிமுறையாக பார்க்கப்படுகிறது. தள்ளுபடி விலையிலும் பொருட்கள் கிடைக்கின்றன.
கிராமங்களுக்கு போகலை..
ஆன்லைன் வர்த்தகத்திலுள்ள சவால்கள் குறித்து இந்த துறை நிபுணர்கள் கூறுகையில், ஆன்லைன் ஷாப்பிங் என்னதான் பிரபலமாக இருந்தாலும், அது இன்னும் கிராமங்களை சென்றடையவில்லை. இதற்கு முக்கிய காரணம், தமிழகத்து கிராமங்களில் அதிவேக இணையதள இணைப்பு முழுமையாக சென்றடையவில்லை.
கம்ப்யூட்டர் பயன்பாடு தெரிவதில்லை
இணையதள பயன்பாடு குறித்து, கிராம மக்களுக்கு தெரியாமல் இருப்பதுடன், அப்படி வாங்கும் பொருளில் தரம் இருக்குமா, பொருள் கைக்கு வந்து சேருமா என்ற பயமும் கிராம மக்களுக்கு உள்ளது. அமெரிக்காவில் கிராம பஞ்சாயத்துகளை கவுன்டி என்று கூறுவார்கள். அங்கெல்லாம், 20 வருடத்திற்கு முன்பே, கம்ப்யூட்டர் பயன்பாட்டை மக்களுக்கு இலவசமாக கற்பித்தனர். அதுபோல நாமும் முன்னேற வேண்டும்.
தமிழில் ஷாப்பிங் செய்வோமா?
ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் ஒன்றுகூட பிராந்திய மொழியில் இயங்கவில்லை. அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்படுபவை. எனவே ஆங்கில அறிவு உள்ளோர் மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் வசதியை பயன்படுத்த முடியும். பிராந்திய மொழிகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் விரிவாக்கம் செய்யப்பட்டால், கூடுதல் வர்த்தகம் நடைபெறும்.
செல்போனில் ஷாப்பிங் வர வேண்டும்
இணையதள வசதிகொண்ட செல்போன்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அளவுக்கான வடிவமைப்பை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கொண்டுவரவில்லை. செல்போன்களில் எளிதாகவும், விரைவாகவும் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய முடிந்தால் இத்துறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். ஏனெனில் ஸ்மார்ட்போன் ஆதிக்கம் தமிழகத்தில் மிக அதிமாக உள்ளது. இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.
அம்மாடியோவ்...
பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியாவில் 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஆன்லைன் ஷாப்பிங் நடந்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவில் ஆண்டுக்கு, 50 பில்லியன் முதல் 70 பில்லியன் அமெரிக்கா டலர் மதிப்புக்கு ஆன்லைன் ஷாப்பிங் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இது இந்திய நிலவரம்
இந்தியாவில் மொத்தம் 91 சதவீதம் அளவுக்கான பொருட்கள் சில்லரை கடைகள் மூலமாக விற்பனையாகின்றன. சுமார் 8 சதவீதம் அளவுக்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் வர்த்தகம் நடக்கிறது. சுமார் 1 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வர்த்தகம் நடக்கிறது. இந்த நிலை அதிகவேகமாக மாறிவருவது என்பதுதான் உண்மை.
ஆன்லைனும், விஐபிகளும்
"யால கவல படுத.. ஒரு மளிகை கடை வச்சாவது பொழச்சிக்கிடலாம் மக்கா.." என்ற வார்த்தைகள்தான் தமிழகத்து தென்மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் ஜீவ ஒலியாக எதிரொலித்துவருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தின் வீச்சு, வருங்காலங்களில் மளிகை கடை மீதான கனவையும் கலைத்துப்போடும் சக்தி கொண்டது என்பதுதான் நிதர்சனம்.
பெட்டிக்கடை பிழைத்தது
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் வந்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள், மளிகை கடை நடக்கவில்லையா என்று கூறுபவர்கள் பலருக்கும், நகரத்தின் அண்ணாச்சி கடை கல்லாப்பெட்டி, உண்டியல் அளவுக்கு சுருங்கி போனது தெரியாது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் கிராமங்களில் தொடங்கப்படவில்லை என்பதால் அங்கு மட்டும் மளிகை, பெட்டி கடைகள் பிழைத்து வருகின்றன.
ஏல, நாங்களும் வந்துட்டோமுல்லா...
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை மளிகைக்கடை இளம் தலைமுறைகளும் புரிந்துதான் வைத்துள்ளன. கால மாற்றத்துக்கு ஏற்ப அண்ணாச்சி கடைக்காரர்களும் கருப்புக்கட்டிகளை ஆன்லைனின் விற்க தயாராகிவிட்டனர். கருப்புகட்டிக்கு பெயர் போன தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த சித்ரா ஸ்டோர்ஸ் அதிபர் பாலச்சந்தர் இதுகுறித்து கூறுகையில் "இந்த காலத்தில் காசு கொடுத்தாலும் கிடைக்காதது நேர்மை மட்டும்தான். எனவே நேர்மையோடு, தரமான பொருட்களை அளித்தால் வாடிக்கையாளர்கள் நம்மை கைவிட மாட்டார்கள். கருப்புகட்டி, பனை வெல்லம் போன்ற தென்மாவட்டங்களுக்கே உரித்தான பொருட்களை நாங்களும் ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளோம்" என்றார். சபாஷ் சரியான போட்டி!