மத்திய அரசு உதவி செய்த போதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை தொடருகிறது- தமிழிசை 'சுரீர்'
தமிழக அரசுக்கு மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு உதவி செய்த போதும், இங்கு மின்வெட்டு பிரச்சனை நீடிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: மத்திய அரசு உதவி செய்த பிறகும் தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு மின்வெட்டு இல்லாத காரணத்தால் மக்கள் இதனை பிரச்சனையாகக் கருதவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசும்போது,'' தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை வரக் கூடாது என்று மாநில அரசை விட மத்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அதனால் தான் மின்வெட்டு பிரச்சனை தீர்க்க 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. இத்தனை உதவிகளை தமிழக அரசு செய்த போதும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை உள்ளது'' என தமிழிசை கூறினார்.