ஸ்ரீதேவி, ஜெயேந்திரர் மரணம், கார்த்தி சிதம்பரம் கைது: தமிழகத்தையே உற்று நோக்க வைக்கும் சம்பவங்கள்
ஸ்ரீதேவி, ஜெயேந்திரர் மரணம், கார்த்தி சிதம்பரம் கைது என 3 விஷயங்களை தமிழகம் இன்று உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக மக்கள் இன்று 3 முக்கிய விஷயங்களை உற்று நோக்கும் நிலையில் உள்ளனர். அவை ஸ்ரீதேவி, ஜெயேந்திரர் மரணம், கார்த்தி சிதம்பரம் கைது சம்பவம் ஆகியன ஆகும்.
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகம் மிகவும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஜெயலலிதா மரணம், கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு என்பதை மக்கள் உற்று நோக்கி வந்தனர்.
அதைத் தொடர்ந்து 2017-இல் முதல்வர் பதவிக்காக சசிகலா ஆடிய பதவி வெறியாட்டம், கூவத்தூர் கூத்துகள், நம்பிக்கை வாக்கெடுப்பு என மக்கள் டிவி, செய்தித் தாளை விட்டு அங்கும் இங்கும் நகராதபடி நடந்தது.
பரபரப்பான தமிழகம்
இந்த ஆண்டும் தமிழகம் பரபரப்பான நிலையில் காணப்படுகிறது. தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய ஸ்ரீதேவி கடந்த வாரம் துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
உடல் வருவதில் தாமதம்
ஸ்ரீதேவிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் எப்போது வரும் என்பதில் கடந்த 3 தினங்களாக பரபரப்பு பற்றிக் கொண்டது. இதையடுத்து ஒரு வழியாக அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்த காத்து கிடக்கின்றனர்.
அந்நிய செலாவணி முறைகேடு
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு அனுமதி கொடுக்க கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றதாக சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் வைத்தே கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது.
ஆன்மீக குரு
இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது அவரது பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவி, கார்த்தி சிதம்பரம், ஜெயேந்திரர் என அடுத்தடுத்து சம்பவங்கள் தமிழகத்தின் பக்கம் அனைவரையும் திரும்ப வைத்துள்ளது.