அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேரளாவுக்கு ரூ.5 லட்சம் நிதி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேரளாவுக்கு அளித்த ரூ.5 லட்சம் நிதிக்கான காசோலை திண்டுக்கல் கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளார்.
கேரளாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 300க்கும் மேற்பட்டோ பலியாகியுள்ளனர். கேரளாவின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது. இதனால், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, விமானப்படை வீரர்கலு சேர்ந்து மீட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளத்தால் ரூ.19,500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் கருதி பிரதமர் மோடி ரூ.500 கோடியை கேரளாவுக்கு நிவாரண உதவி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு ரூ.10 கோடி நிவாரண நிதியுதவி அளித்தது. அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை கேரள அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு மட்டுமல்லாம், தெலங்கானா, டெல்லி, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா ஆகிய மாநில அரசுகளும் கேரளாவுக்கு நிதியுதவி அறிவித்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் நிலையை அறிந்து வருந்தும் தனி நபர்கள், அமைப்புகள் கேரளா அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் அனுப்பிரிய என்ற சிறுமி தான் சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த ஒன்பதாயிரம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
அதே போல, கரூர் சிறுமி அஷயா தனது இதய அறுவை சிகிச்சைக்காக பெற்ற நிதி ரூ.25 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரத்தை கேரளா வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் காசோலையை அளித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் அளித்த வெள்ள நிவாரண நிதி காசோலையை அவருடைய மகன்கள் இன்று திண்டுக்கல் ஆட்சியர் வினய்யிடம் அளித்தனர்.