நீட் தேர்வில் தமிழக மாணவர்களை ஏமாற்ற காத்திருக்கிறது தமிழக அரசு: ஈஸ்வரன் காட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களை இந்த முறையும் ஏமாற்ற காத்திருக்கிறது தமிழக அரசு என்று ஈஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை: கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும் வகையில் தமிழ அரசு செயல்பட்டு வருவது ஏற்புடையதல்ல என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வு இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி மே 6ம் தேதி நடக்கும் என்று மத்திய அரசு நேற்று வெளியிட்டு இருப்பது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை மாநில பாடத்திட்டத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லி வந்த தமிழக அரசு இந்த விஷயத்தில் மெளனம் காப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பயிற்சி மையங்கள் எங்கே ?
அந்த அறிக்கையில், நேற்றையதினம் சிபிஎஸ்இ மே 6-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பை வெளியிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா ? நடக்காதா ? என்ற சந்தேகத்திலேயே தேர்வு நடத்தப்பட்டு பல ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவும், அரியலூர் மாணவி அனிதாவின் உயிரும் மத்திய, மாநில அரசுகளால் பறிபோனது.நீட் தேர்விலிருந்து இனி தமிழகத்திற்கு விலக்கு பெற முடியாது என்ற நிலை உருவான பிறகாவது, தமிழக கல்வித்துறை சுறுசுறுப்பாக செயல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை விரைவாக தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசின் மெத்தனப்போக்கு
ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. தமிழக கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பில் மட்டும் வேகம் இருந்ததே தவிர, பயிற்சி வகுப்புகள் தொடங்கியதில் ஆமை வேகத்தை விட குறைவு தான். தமிழக அரசு தமிழகம் முழுவதும் 385 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு அறிவித்ததில் கால்வாசி பயிற்சி மையங்கள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசும், தமிழக கல்வித்துறையும் மெத்தனம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
110 விதியின் கீழ் அறிவிப்பா ?
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளே தொடங்க முடியாத சூழ்நிலையில் ஐஏஎஸ் அகாடமிகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை தமிழக கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறாரா என்ற சந்தேகம்தான் எழுகிறது. தமிழக அரசு தமிழக மாணவர்களின் நலனில் துளியும் அக்கறை காட்டவில்லை. எனவே கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தமிழக மாணவர்களை வஞ்சிக்க தமிழக அரசு காத்திருப்பது போல் தெரிகிறது.
மாணவர்களை ஏமாற்ற திட்டம்
நீட் தேர்வு நடத்தும் வாரியம் கடந்த ஆண்டு போலவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று கருத்துக்கூறியிருப்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுவிடுவோம் என்று கூறி மாணவர்களை ஏமாற்றியது போல, இந்த ஆண்டு மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று கூறி நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம். நீட் தேர்வு நெருங்கும் போது மாணவர்கள் நலனில் அக்கறை இருப்பதை போல பாடத்திட்டத்தை பற்றி தலைவர்கள் கருத்து கூறுவது கடந்த ஆண்டை போல உயிரழப்பு ஏற்படும் நிலையை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வஞ்சிக்கும் தமிழக அரசு
+2 இறுதி தேர்வு முடிந்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் தமிழக மாணவர்களுக்கு தமிழக முழுவதும் முழுநேர நீட் பயிற்சி மையங்களை உருவாக்கி தமிழக அரசு திறம்பட நடத்திட இப்போதே தமிழக முதல்வர் அவர்களும், தமிழக கல்வித்துறை அமைச்சர் அவர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நடக்கப் போகும் நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் அதற்கு காரணம் தமிழக அரசும், தமிழக கல்வித்துறையும் தான் என்று ஈஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.