உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு... தமிழக அரசு அறிவிப்பு!
ஓகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : ஓகி புயலால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழித்துறை ரயில்நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இழப்பீடு தொகைகளை அறிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ.5 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவில் இருந்து மீனவர்களை மீட்க ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படும். கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மீனவர்களின் குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா ரூ. 2,500 வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.