வைஃபை, மருத்துவ சேவையுடன் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைகிறது "அம்மா- இ- கிராமம்"!
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா-இ-கிராமம் என ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு தகவல் தொழில்நுட்ப வசதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் "அம்மா -இ-கிராமம்" தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி 110ன் கீழ் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்:
கால்நடை பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம் என்று இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அம்மா திட்டம் இணைந்துள்ளது.
தமிழத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் "அம்மா -இ-கிராமம்" தேர்வு செய்யப்பட்டு, அந்தக் கிராமத்திற்கு, தகவல் தொழில்நுட்பவியல் வசதிகள் வழங்கப்படும். அதாவது கம்பியில்லா இணையதள ஹாட்ஸ்பாட், திறன்மிகு தெருவிளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும். உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக பெறப்படும் பாலை கையாள திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 24 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் அமைந்துள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஒரு புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்படும். கிராமப்புறபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.