பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள்... தமிழக அரசு அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வோர் கூட்ட நெரிசலின்றி பயணிக்க 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி சவுகரியமான பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை கழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் ஆலோசனை நடந்தது.
ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 11,983 பேருந்துகள் இயக்கவும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 3,770 பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பயணிகள் வசதிக்காகவும், சென்னை நகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கோயம்பேடு பேருந்து நிலையம், அண்ணாநகர், தாம்பரம், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு மையங்கள் மூலம் 9ம் தேதி முதல் பதிவு செய்யப்படும். பண்டிகை காலத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.