துறையூர் வெடிவிபத்து... பலியான 19 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3.5 லட்சம் நிவாரணம்!
துறையூர் வெடிவிபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு தலா ரூ. 3.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: துறையூர் வெடிவிபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3.5 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தளுகை முருங்கப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் கடந்த வியாழனன்று ஏற்பட்ட வெடிவிபத்தில், 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது இது சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்த 4 பேருக்கு ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்தத் தொகையை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அமைச்சர்கள் இன்று வழங்குகின்றனர்.