கொஞ்சம் ஹேப்பி.. வாடகை வீடுகளுக்கான சொத்து வரியை மட்டும் 50% குறைத்த தமிழக அரசு
சென்னை: வாடகை வீடுகளுக்கான சொத்து வரி உயர்வை தமிழக அரசு பாதியாக குறைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி மாற்றியமைக்கப்படாத நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஜூலை 19ம் தேதி பிறப்பித்த அரசாணையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குடியிருப்புகளுக்கான வரி 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கான வரி 100% உயர்த்தப்பட்டது.
சொத்து வரியை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் எதிரில், வருகின்ற 27ம் தேதி, போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
பாமக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும், அரசு முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கே.கே.ரமேஷ், இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வாடகை வீடுகளுக்கான சொத்து வரி 100%ல் இருந்து 50% ஆக குறைக்கப்பட்டு இன்று தமிழக அரசின் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிற உயர்த்தப்பட்ட வரிகள் அப்படியே தொடருகின்றன.