டெங்கு வார்டுகளுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்.. அடிபொடிகள் அலப்பறையால் நோயாளிகள் அவதி!
டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் செல்லும் அரசியல்வாதிகளால் இடைஞ்சல் தான் வந்து சேர்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சென்னை : டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் அரசியல்வாதிகளால் இடைஞ்சல்கள் தான் ஏற்படுவதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கூட இல்லாமல் மக்கள் தரையில் படுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு மரண பீதியில் உள்ள மக்கள் எப்படியாவது தங்களது உறவுகள் சிகிச்சை பெற்று மீண்டு வந்தால் போதும் என்று வசதி குறைவாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சில பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மனவேதனையுடன் காய்ச்சல் சரியாகிவிட வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடி வருகின்றனர்.
நோயாளிகளுடன் சந்திப்பு
நிலைமை இப்படி இருக்க டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கிறதா என்பதை தமிழக அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு பழம் உள்ளிட்டவற்றை அளித்து விரைவில் உடல்நலன் தேறி வீடு திரும்பவும் ஆறுதல் கூறுகின்றனர்.
குவியும் தொண்டர்கள்
அரசியல்வாதிகள் மக்கள் மீதான அக்கறையுடன் இதனைச் செய்தாலும் இதனால் தங்களுக்கு இடைஞ்சலே ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். அரசியல்வாதிகள் வரும் போது அவர்களுடன் தொண்டர்கள் 50 பேர் வந்து வார்டுகளில் அலப்பறை செய்கின்றனர். மேலும் நலத்திட்ட உதவி வழங்கும் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள்.
சிகிச்சை தர முடியவில்லை
மேலும் அரசியல் தலைவர்கள் வந்து போகும் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் செவிலியர்களும், மருத்துவர்களும் அல்லல்படுகின்றனர். இதே போன்று மருந்து வாங்கச் செல்பவர்கள் மருத்துவமனையில் கூடும் கூட்டத்தால் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாகக் கூறுகின்றனர்.
இப்போது தொற்று ஏற்படாதா?
நோய் பாதித்தவருடன் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவறுத்துகின்றனர். ஏனெனில் நோய் தொற்று ஏற்படும் என்று காரணம் சொல்கின்றனர், ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் கும்பல் கும்பலாக வந்து செல்வது எந்த வகையில் நியாயம் என்று குழுறுகின்றனர் பொதுமக்கள்.