தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, 'இப்படி' ஒரு ஆட்சி முறை வரப்போகிறதே!
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, பொதுச்செயலாளர், முதல்வர் என இரு அதிகார மையங்களின்கீழ் அரசு இயங்கப்போகிறது.
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இரு தலைமையின் கீழ் ஆட்சி நடைபெறப்போகிறது.
தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, எம்ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அவர்கள் சார்ந்த கட்சி தலைவராக இருந்து கொண்டுதான் முதல்வர் பதவியையும் வகித்து வந்தனர். கட்சி தலைமையாளரே முதல்வராக முடியும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத சட்டம்.
பிற மாநிலங்களை பொறுத்தளவில் முதல்வர் ஒருவராகவும், கட்சி தலைவர் இன்னொருவராகவும் இருப்பதே அதிகம். தேசிய கட்சிகளில் இந்த நடைமுறை கட்டாயமாக இருக்கும். தேசிய அளவில்கூட, பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி என்பது கவனிக்கத்தக்கது. முன்பும், சோனியா தலைவராகவும், மன்மோகன்சிங் பிரதமராகவும் இருந்தனர்.
இரு அதிகாரங்கள்
ஆனால், தற்போது, தமிழகத்தில் முதல்முறையாக மாநில கட்சி ஆட்சியில் இரு தலைமையின் கீழ் ஆட்சி அதிகாரம் வர உள்ளது. ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதாவிடம் இருந்த பொது செயலாளர் பதவியை பிடிக்க அதிமுகவுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.
போட்டியாளர்கள்
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, செங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பொதுச் செயலர் போட்டியில் உள்ளனர். ஆனால் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை பொது செயலாளராக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. எனவே, ஆட்சியை இயக்கப்போவது ஓ.பன்னீர்செல்வமா அல்லது புதிதாக வர உள்ள பொதுச்செயலாளரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அதிகாரம் இல்லை
பொதுச்செயலாளருக்கு கட்டுப்பட்டே முதல்வர், அமைச்சர்கள் செயல்பட வேண்டிவரும் என்பதால், பன்னீர்செல்வம் மீண்டும் அதிகாரம் இல்லாத முதல்வராகவே தொடர வேண்டிவருமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகவும் வாய்ப்புள்ளது.
கைகட்டப்பட்ட முதல்வர்
ஆனால் அப்படி செய்தால் பன்னீர்செல்வம் கோஷ்டி வாளை சுழற்றும் என்பதால் அதற்கான வாய்ப்பு குறைவாம். அதேநேரம், இப்போதைக்கு ஆட்சியில் எந்த ஒரு புதிய நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் பன்னீர்செல்வம் கைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.