'நீட்': தமிழக அரசின் துரோகத்தால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும்... அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசின் துரோகத்தால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும் என்று அன்புமணி அச்சம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: நீட் தேர்வுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் துரோகம் இழைத்த தமிழக அரசால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வு இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி மே 6ம் தேதி நடக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டு இருப்பது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை மாநில பாடத்திட்டத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்று சொல்லி வந்த தமிழக அரசு இந்த விஷயத்தில் மெளனம் காப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மே மாதம் நீட் தேர்வு
அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதில் தங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை தமிழகத்தை ஆளும் பினாமி அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஆட்சியாளர்கள் நீட் தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் அதற்காக எதுவும் செய்யாதது கண்டிக்கத்தக்கது.
2018-19-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழக மக்களுக்கு துரோகம்
மாறாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்து, அதை அரை குறையாகத் தொடங்கியிருப்பதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எழுதித்தான் தீர வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கால்களில் மண்டியிட்டுக் கிடக்கும் ஆட்சியாளர்களால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி ஓராண்டுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாதது வெட்கக்கேடானது ஆகும். இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்.
சொன்னபடி செய்யாத அரசு
நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடப்புக் கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள 412 ஒன்றியங்களிலும் தலா ஒரு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அறிவித்தவாறு எதையும் செய்யாத தமிழக அரசு, நவம்பர் 13ஆம் தேதி தான் இத்திட்டத்தை தொடங்கியது.அதுவும் அனைத்து ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்களைத் திறக்காத அரசு, முதலில் 100 ஒன்றியங்களில் மட்டும் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கியது.
அமைச்சரின் அறிவிப்பு எங்கே ?
மீதமுள்ள ஒன்றியங்களில் ஜனவரி மாதத்திற்குள் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால், ஜனவரி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முதலில் தொடங்கப்பட்ட 100 மையங்களைத் தவிர ஒரு மையம் கூட புதிதாக திறக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு உத்தேசமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் மார்ச் மாதம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதுவதற்குப் போய்விடும்.
பெயரளவில் பயிற்சி மையங்கள்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து அதை செய்யாமல் ஏமாற்றியது, அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் மீதமுள்ள 312 ஒன்றியங்களில் உடனடியாக நீட் பயிற்சி தொடங்கப்பட்டால் கூட, மாணவர்களால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குத் தான் தயாராக முடியுமே தவிர, நீட் தேர்வுக்கான பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது.
இந்த ஆண்டும் அனிதாக்கள்
இவ்வாறாக தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஏராளமான அனிதாக்கள் உருவாவதற்கே தமிழக அரசின் நடவடிக்கைகள் வழி வகுக்கும். இந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சியளிக்கும் மையங்களை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அது தான் அதன் துரோகங்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.