உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக கிரானைட் முறைகேடு விசாரணையை திசை திருப்ப முயற்சி: பழ.நெடுமாறன்
பரமக்குடி: மதுரை கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் மதுரை கலெக்டர் தலைமையில் மற்றொரு விசாரணை நடத்தப் படுவதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
பரமக்குடியில் மேம்பாலம் கட்டுவதற்காக கொவிந்தபுரம் பகுதி குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அந்தப் பகுதியில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவரிடம், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை இடிக்காமல் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், மதுரையில் உயர்நீதிமன்ற ஆணையின்படி சகாயம் தலைமையில் நடைபெறும் கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையை திசை திருப்ப மதுரை கலெக்டர் தலைமையில் மற்றொரு விசாரணை நடத்தப்படுவதை கண்டிப்பதாகக் கூறிய பழ.நெடுமாறன், இது உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
இதேபோல், மதுப்பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, ‘அதிகாரத்தை கையில் வைத்து செயல்படும் மோடி, இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை வலியுறுத்தவேண்டும். மதுவிலக்கை அமல்படுத்திய மாநிலங்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.