ரூ.230 கோடி ரூபாய் வருவாய் இழப்பு...ஆனால்?!' - ஆதங்கத்தில் பா.ம.கவினர்
தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருவாய் இழப்பு ரூ.230 கோடி ஏற்பட்டுள்ளதற்கு பாமக எடுத்த நடவடிக்கைகளே காரணம். ஆனால் அது குறித்து யாரும் பேசுவதில்லை என பாமகவினர் ஆதங்கத்தில் உள்ளனர்.
சென்னை: ' தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் குறைந்திருப்பதற்கு நாங்கள்தான் காரணம். ஆனால், இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை' என ஆதங்கப்படுகின்றனர் பா.ம.கவினர். ' நீதிமன்றத்தின் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை மூட வைத்தோம். அவற்றையெல்லாம் திறப்பதற்கு அரசு முயற்சித்தபோதும் சட்டரீதியாகவே போராடினோம்' என்கின்றனர் பா.ம.கவினர்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கமணி. அந்த அறிக்கையில், ' தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கடந்த 2016-17ல் ரூ.26,995.25 கோடியாக இருந்தது. ஆனால், 2017-18ல் டாஸ்மாக் வருவாய் 26,794.11 கோடியாக உள்ளது.
அதாவது கடந்த 2016-17ஐ காட்டிலும் 2017-18ம் நிதியாண்டில் ரூ.231 கோடி வரையில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளது. இதில், சிறப்புரிமை கட்டணம் மற்றும் விற்பனை கட்டணம் ரூ.193.96 கோடி ஆகியவற்றை கழிப்பதற்கு முன்னதாக உள்ள தொகை ஆகும்.
மின்னணு பற்று சீட்டு
டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடப்பதை தவிர்ப்பதற்காக 1,250 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பற்றுச்சீட்டுகளை கையினால் எழுதும்போது ஏற்படும் தவறுகளை தவிர்க்க மின்னணு பற்றுசீட்டு இயந்திரங்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் நிறுவப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
குடிநோயாளிகள்
அரசுக்கு வர வேண்டிய மதுபானம் மூலமான வருவாயில் இழப்பு ஏற்பட்டாலும், டாஸ்மாக் விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்களுக்கு ஊதிய உயர்வை அளித்துள்ளது அரசு. டாஸ்மாக் வருமானம் குறைவு குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க நிர்வாகி ஒருவர், " 2003-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் மதுபானம் குடிப்போரின் எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டேதான் சென்று கொண்டிருக்கிறது. குடிநோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே போகிறது.
கடைகள் மூடப்பட்டன
இத்தனை ஆண்டுகளில், முதல்முறையாக 230 கோடி ரூபாய் மது வருவாய் குறைந்துவிட்டது என அரசு ஒத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம். மது விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றாலும், அதற்கான தேவையைக் குறைத்தாலே போதும் என்ற அடிப்படையில் வழக்குகளைத் தொடர்ந்தோம். எங்களுடைய முயற்சியால் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகள் மூடப்பட்டன.
சமூக ஆர்வலர்கள்
இதுவரையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றையெல்லாம் திறப்பதற்கு அரசு பல வழிகளில் முயற்சி செய்தாலும், தொடர்ந்து சட்டரீதியாக போராடி வருகிறோம். பா.ம.க முன்னெடுத்த முயற்சிகளால்தான், இன்று மது விற்பனையில் அரசு சரிவைச் சந்தித்துள்ளது. இது எங்களுடைய பெரிய சாதனை. இதைப் பற்றியெல்லாம் சமூக ஆர்வலர்கள் யாரும் பேச மாட்டார்கள். மதுவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றார்.