கண் அசைவு வரவில்லை.. கர்நாடக அரசு கொடுத்த நிவாரண நிதியை வாங்காமல் தமிழகம் இழுத்தடிப்பு!
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி, நிவாரண உதவி செய்ய கர்நாடக அரசு தயாராக இருந்தும், அதை பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்குவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா 3 நாட்கள் முன்பு அறிவித்தார். தமிழகத்தோடு ஒருங்கிணைப்பு பணிகளை செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகம்தான், தமிழகத்துக்கு உதவியை அறிவித்தது. ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை உருவாக்கி, தமிழக அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கவும் தொடங்கியது கர்நாடக அரசு.
முதல்வர் சித்தராமையாவின் உத்தரவை தொடர்ந்து புதன்கிழமை உடனடியாக தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகனுடன் கர்நாடக மாநில தலைமை செயலாளர் கவுஷிக்முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கர்நாடக அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஞானதேசிகன், முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து பேசி நிவாரண நிதி உள்பட உதவி பெறுவது தொடர்பாக தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக தமிழக தலைமை செயலாளரிடம் இருந்து தகவல் வரவில்லை. கர்நாடக மாநில தலைமை செயலாளர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், இன்னும் ஜெயலலிதாவின் அனுமதி கிடைக்கவில்லை என்ற பதில் வருவதாக கர்நாடக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த இழுபறிக்கு நடுவே, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, வெள்ள நிவாரண நிதியுதவியாக ரூ.5 கோடி அறிவித்துள்ளது. அனைத்து உத்தரவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்பார்த்திருப்பதுதான், இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.