குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டது.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு இன்று வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என தேர்வுகளை நடத்திவருகிறது. இதில் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்துமுடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி அறிவித்தார். அதன்படி இன்று தமிழக அரசு குரூப் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை உயர்த்தி அரசானை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு 35 வயதிலிருந்து 37 வயதாக உயர்த்தி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழகத்தில் குரூப் 1 தேர்வை போட்டித் தேர்வாளர்கள் மேலும் கூடுதலான எண்ணிக்கையில் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு குரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தாலும், போட்டித் தேர்வாளர்கள் சங்கத்தினர் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை 40 வயதாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.